Saturday, August 20, 2011

டக்.... டக்..... நாங்க டெல்லி போலீஸ், கதவைத் திறங்க!

//சார் , இந்த ஆளு எந்த லஞ்சமும் வாங்காத பஞ்ச பரதேசியா இருக்கானே, காலங்கார்த்தாலே இவன் மூஞ்சில முழிக்க வைச்சுட்டீங்களே, எனக்கு இன்னிக்கு எந்த கலெக்சனும் இல்லாம போயிடும் போல இருக்கே!//
காட்சி 1:

(நாடக அங்கத்தினர்கள்: குடும்பத் தலைவர் சின்னசாமி , குடும்பத் தலைவி பரிமளம், டி.எஸ்.பி. தினேஷ்,கான்ஸ்டபிள் கண்ணையா 402 )


டக்…. டக்…..

சின்னசாமி : பரிமளம், யாரு கதவைத் தட்டுறாங்கனு பாரு !

பரிமளம்(கதவின் வியூ பைண்டர் வழியாக வெளியே பார்த்தபடி) : யாரோ காக்கி சட்டை போட்டுக்கிட்டு நிக்கிறாங்க!

சின்னசாமி : இந்த வாட்ச் மேன் காலங்கார்த்தாலே எதுக்கு வந்து கதவை தட்டுறான் ? சரி கதவைத் திற!

(பரிமளம் கதவைத் திறக்கிறார். போலீசார் இருவர் வீட்டுக்கு உள்ளே வருகின்றனர்.)
குட்மார்னிங் மிஸ்டர் சின்னசாமி! நான் டி.எஸ்.பி. ஷியாம், இவர் கான்ஸ்டபில் கண்ணையா, வீ ஆர் பிரம் டில்லி போலீஸ்!

சின்னசாமி : அப்படியா, வாங்க உட்காருங்க, பரிமளம் அந்த பேனைப் போடு, சார் என்ன விசயமா வந்திருக்கீங்க?

டி.எஸ்.பி. தினேஷ்: உங்க கிட்ட விசாரணை நடத்த வந்திருக்கோம்!

சின்னசாமி (அதிர்ச்சியுடன்) : விசாரணையா, சார் நான் டி.வி.யில வானிலை அறிக்கை வாசிக்கிறவன், எங்க டிபார்ட்மென்ட்ல அஞ்சு பைசா கூட லஞ்சம் கிடைக்காதுங்க. என் வீட்டை வேணா நல்லா சோதனை போட்டுக்கங்க. பேங்கில ஹவ்சிங் லோன், ஆபீஸ்ல பி.எப். லோன்னு கழுத்தை சுத்தி கடன் இருக்கு சார்.

கான்ஸ்டபிள் கண்ணையா (டி. எஸ்.பி காதருகில் மெதுவான குரலில்) : சார், இந்த ஆளு எந்த லஞ்சமும் வாங்காத பஞ்ச பரதேசியா இருக்கானே, காலங்கார்த்தாலே இவன் மூஞ்சில முழிக்க வைச்சுட்டீங்களே, எனக்கு இன்னிக்கு எந்த கலெக்சனும் இல்லாம போயிடும் போல இருக்கே!

டி.எஸ்.பி. தினேஷ் :அட நீ கொஞ்சம் சும்மா இருய்யா (என்று கண்ணையாவை அதட்டுகிறார் )!

டி.எஸ்.பி. தினேஷ் (சின்னசாமியிடம் ) : சரி இன்னிக்கு உங்க புரோகிராம் என்ன, இப்ப என்ன பண்ணப் போறீங்க?

சின்னசாமி : சார் இப்ப டி.வி. யில ரஜினி, குஸ்பு நடிச்ச பாண்டியன் படம் போடப் போறாங்க , அதைப் பார்க்கப் போறேன்…

டி.எஸ்.பி. தினேஷ் : யோவ் .. அந்தப் படம் சரியான மொக்க , அதையா பார்க்கப் போற…

சின்னசாமி : என்ன டி.எஸ்.பி. சார் இதை சொல்லவா நீங்க வந்தீங்க…

டி.எஸ்.பி. தினேஷ் :ஆ..ங் …. சரி நீங்க இப்ப வெளியிலே எங்கும் போகப் போறதில்லை சரிதானே…
சின்னசாமி : இன்னிக்கு முழுதும் எங்கயும் வெளியில் போகற ஐடியா இல்லை சார்…

டி.எஸ்.பி. தினேஷ்: இந்த பார்க்…

சின்னசாமி : இல்லை சார், எந்த பார்க்குக்கும் நான் போகும் உத்தேசம் இல்லைங்க…

டி.எஸ்.பி. தினேஷ் அப்படியா …. நல்லது.. நான் வரேன்…

இந்த நேரத்தில் டி.எஸ்.பி.யின் செல் போன் ஒலிக்கிறது .. எடுத்துப் பேசுகிறார்
எஸ் சார்… என்ன சார் ….ஒ.கே சார் . போனை ஆப் செய்கிறார்.

டி.எஸ்.பி. தினேஷ்: மிஸ்டர் சின்னசாமி, நீங்க காலையில என்ன சாப்பிட்டீங்க?

சின்னசாமி : சார் … உண்மையை சொல்லனும்னா … வீட்டில நேத்து சாயந்திரமே கேஸ் தீர்ந்து போச்சு… அதுனால காலையில் இருந்து ஒரு டீ கூட குடிக்கலை.

டி.எஸ்.பி. தினேஷ்: மிஸ்டர் சின்னசாமி, நீங்க எந்த வித அனுமதியும் இல்லாம உண்ணாவிரதம் இருக்கீங்க… அதுனால நான் உங்களை அரெஸ்ட் பண்றேன்…

சின்னசாமி : சார், என்ன சார் இது, பரிமளம் ஒரு பிடி அரிசியை கொண்டுவந்து என் வாயில் போடு, அப்ப உண்ணாவிரதம் இல்லைன்னு ஆயிடும்!

டி.எஸ்.பி. தினேஷ் :யூ மீன் வாய்க்கரிசி? டூ யூ பிளான் பார் சூசைட் ?

சின்னசாமி : சார் … சார் .. நான் எது சொன்னாலும் குற்றமா போகுதே, நான் சாதரணமான ஆளு சார்… என்னை விட்டுடுங்க…

டி.எஸ்.பி. தினேஷ் : மிஸ்டர் சின்னசாமி, நீங்க ஒரு டீ.வி. நாடகத்துல, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்”, அப்படின்னு கத்தி இருக்கீங்க!

சின்னசாமி : அதுல என்ன சார் தப்பு!

டி.எஸ்.பி. தினேஷ் :அப்படி வாங்க, யோவ் 402, அந்த விலங்கை எடுத்து இவர் கையில மாட்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் பிரதமரையும் லோக் பால் மாசோதாவுக்குள் கொண்டு வரணும்னு சொல்றதுதானே உங்க அர்த்தம்?

சின்னசாமி : சார் நான் அந்த அர்த்தத்துல சொல்லலை !

டி.எஸ்.பி. தினேஷ் :அப்ப ஒரு வெள்ளை பேப்பரை எடுங்க. எடுத்து “பிரதமர், பிரதமரின் உறவுகாரங்க, பிரதமரின் நண்பர்கள், பிரதமரின் காரியதரிசி, பிரதமரின் டிரைவர், வெளிநாட்டில் வசிக்கும் உள்நாட்டு நண்பர்கள், வெளி நாட்டில் வசிக்கும் வெளி நாட்டு நண்பர்கள் …. ஆகியோருக்கு லோக்பால் மசோதா வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் , அதோடு இவர்கள் வூழலே செய்ய இயலாத கரை படியாத கரத்துக்கு சொந்தக் கார்கள் என்று லோக்பால் அமைப்பு சான்றிதழும் தர வேண்டும்” என்று எழுதி உங்க கையெழுத்தை போட்டு தாங்க!

சின்னசாமி : சார் நான் எதுக்கு தான் இதை எல்லாம் எழுதி தரனும், எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!

டி.எஸ்.பி. தினேஷ் :அப்ப பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதி உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் கைது செய்கிறோம். உங்களை நீதிபதி முன்னால நிறுத்தப் போறோம், சட்டப் படி தான் எல்லா நடவடிக்கையும் எடுக்குறோம்.

சின்னசாமி : சார், சார் ஒண்ணுமே புரியலையே, நான் ஒரு தப்பும் பண்ணலை, என்னை விட்டுடுங்க!

கான்ஸ்டபிள் கண்ணையா :யோவ், நீ ஆளும் வர்க்கத்தோட ஒத்துப் போய் ஜால்ரா போடா தெரியாத கேனை , அதான் ஒன தப்பு… புரியுதா.. லந்து பண்ணாம ஜீப்புல ஏறு!

டி.எஸ்.பி. தினேஷ் ( ஜீப் கிளம்பு முன் வெளியே நின்ற பத்திர்க்கையாளரிடம் ): “பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததர்க் காகவும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தடைக் கல்லாக இருந்ததற்காவும் திரு. சின்னசாமி யை கைது செய்கிறோம்” !
(திரை )

1 comment:

  1. திருச்சி குசும்புன்னு சொல்லுவாங்களே, அதானா இது... வாரத்திற்கு ஒரு பதிவாவது போடலாமே தோழா..

    ReplyDelete